14 ஜன., 2011

திருப்பூர் நகரம் மாறி தற்கொலை நகரம்

          பின்னலாடை உற்பத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் திருப்பூர் நகரம், தற்கொலை செய்வோர்கள் அதிகம் கொண்ட நகரமாக மாறி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
         திருப்பூர் மற்றும் அத்னைச் சுற்றி சுமார் 25,000 பின்னலாடை உற்பத்தி ஆலைகள் உள்ளன.
       இந்த தொழிற்சாலை முதலாளிகளுக்கு கோடி கோடியாக வருவாயை ஈட்டிக் கொடுத்து, இந்திய ஆடை உற்பத்தி துறையின் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கையும் ஈட்டிக் கொடுக்கும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு வருமானம் 2009 ஆம் ஆண்டிலேயே 120 பில்லியன் ரூபாயை எட்டியிருந்தது.கடந்த ஆண்டு இது இன்னும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

         இந்த அளவுக்கு வருவாயை ஈட்டித்தரும் இந்த திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ, வறுமையின் கோரப்பிடியில்!

இந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் சுமார் 3 லட்சம் பேர் பிழைப்புக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, குறிப்பாக தென்மாவட்டங்களிலிருந்தும், பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்தும் வந்து குடியேறியவர்கள்தான்!

ஆனால் வறுமை, வேலைப் பளு, நிரந்தரமற்ற வேலை, கழுத்தை நெரிக்கும் கடன்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் பைனான்சியர்கள் மற்றும் அவர்களது அடியாட்களின் துன்புறுத்தல்கள் என நாலாபுறமிருந்தும் நெருக்கும் பிரச்சனைகளால், இந்த தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி அதிர வைக்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் கழகம்!
உழைப்புக்கு ஏற்ற கூலி இன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள்து குடும்பத்தை சேர்ந்தவர்களின் தற்கொலை எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 405 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கிறது அரசு பதிவேடுகள் மூலம் பதிவான புள்ளிவிவரங்கள். இந்த எண்ணிக்கை, கடந்த 2009 ல் 338 ஆக காணப்பட்டது.
வறுமை, வேலையின்மை, பணமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு மதுவில்தான் என்ற தவறான எண்ணத்தில், குடித்துவிட்டு வரும் ஆண்கள் வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் தகராறு செய்து, அவர்களை அடித்து உதைப்பது வாடிக்கையாகி வருகிறது.

கணவனின் அராஜகத்தை பொறுத்து பொறுத்து பார்க்கும் பெண்கள், இறுதியில் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து புகார் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற குடி பிரச்சனைகள் மட்டுமல்லாது பாலியல் பிரச்சனைகள் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காகவும் மகளிர் காவல் நிலையம் படி ஏறுகின்றனர் பெண்கள்.
  
    திருப்பூரிலுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர், கடந்தமாதம் மட்டும் 103 பேர் விஷம் குடித்தோ, தூக்கிட்டோ அல்லது தீவைத்துக் கொண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல் நிலையங்களில் பதிவான புள்ளிவிவரங்களை கூறி அதிரவைக்கிறாரஇந்திய தொழிலாளர் சட்டம், 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் கூலி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் திருப்பூரிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் 8 மணி நேர கூலி அடிப்படையிலான சம்பளத்திலேயே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வரை, சில இடங்களில் 16 மணி நேரம் வரை கூட வேலை வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கட்டிங், ஸ்ட்ரிச்சிங், டெய்லரிங் மற்றும் அயனிங் போன்ற வேலைகளுக்கான 12 மணி நேர ஷிப்ட்டுக்கு சுமார் 190 ரூபாய் வழங்கப்படுகிறது.அதேப்போன்று லேபிளிங்கிற்கு 132, மடிப்பதற்கு 131, செக்கிங்கிற்கு 119 மற்றும் பேக்கிங்கிற்கு 106 ரூபாய் என்ற விகிதத்தில் கூலி வழங்கப்படுகிறது.

தொழிலாளர் சட்டம் மற்றும் ஊதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறான இந்த போக்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தி, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க வழி வகை செய்தாலே இத்தகைய தற்கொலைகளில் பாதியையாவது தடுக்கலாம்.

மனது வைக்குமா அரசு?

குறிப்பு : ஆங்கிலத்தில் படித்ததை இங்கு பதிவு செய்துள்ளேன் .....

13 ஜன., 2011

ரயில்வே சோதித்த தமிழர் குடும்பம் ...

       சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கோவா செல்லும் வாஸ்கோ விரைவு தொடர் வண்டியில் கடந்த வாரம் குடும்பத்துடன் ஒருவர்  சென்றபோது, இரயில் பயண நடத்துனர் வந்து பயணிகளின் பயணச் சீட்டை வாங்கி சரி பார்த்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு சோதனைக் குழு (4 பெண்கள் ஒரு ஆண்) அவர்களின்  பயணப் பெட்டிக்கு சென்றது.
 
அவர்கள்  பெட்டியில் அடுத்தடுத்த அறைகளில் 5, 6 பேர் குழுவாக பயணம் செய்யும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்களிடம் சென்று, அவர்கள் இணையத்தின் வாயிலாக பயண சீட்டு முன் பதிவு செய்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டச் சொல்லிக் கேட்டது. அவர்களில் ஒருவர் தனது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டியபோது, அது போதாது, எல்லோரும் காட்ட வேண்டும் என்று அந்த சோதனைக் குழுத் தலைவி கட்டளையிட்டார். அப்படி எந்த நிபந்தனையும் பயணச் சீட்டில் இல்லையே என்று ஒரு பயணி கேட்க, அவரிடம் கோபமாக பாய்ந்த அந்தத் தலைவி, நாங்கள் சட்டப்படிதான் (எந்தச் சட்டம் என்று கேட்டதற்கு பதில் இல்லை) செய்கிறோம். இருக்கிறதா? இல்லையா? என்று அதிகார தோரணையில் மிரட்ட, வாய் தகராறு மூண்டது.

உடனே, அந்த சோதனைக் குழுத் தலைவி, ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ என்றெல்லாம் கூறி, முறையாக வினா எழுப்பியவரை மிரட்டினார். அவர் மிரளவில்லை. அவரைத் தவிர அந்தக் குழுவில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் அடையாள அட்டைகளை காட்ட, அவரை மட்டும் விட்டுவிட்டனர். பக்கத்து அறையில் பயணம் செய்த மாணவர்கள் 6 பேரை உலுக்கியெடுக்க, அதில் ஒருவர் வேறொருவர் பயண சீட்டில் வருவதை கண்டுபிடித்து, இரண்டு மடங்கு அபராதம் விதித்து, வசூலும் செய்துவிட்டது. அதற்கு ஒரு திருப்தி. அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் சோதகரைப் பார்த்து, “இப்படிப்பட்ட சோதனை எதுவும் மற்ற மாநிலங்களில் நடைபெறுவதில்லையே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு பதிலேதும் அளிக்காமல், அரக்கோணம் வந்ததும் இறங்கி சென்றது சோதனைக் குழு! அவர்களுடைய பயணச் சீட்டை சோதிக்கவில்லை. சோதித்தால் என் மனைவிக்கு ஏது அடையாள அட்டை? ஆனால் அந்தக் குழு கண்டுகொள்ளவில்லை. வந்தது, வசூலித்தது, போய்விட்டது!

 ஒரு குழுவாக பயணச் சீட்டு பதிவு செய்யும்போது, அதிலுள்ள அனைவரும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற விதி ஏதும் இருக்கிறதா என்று பயணப் பதிவு விவரத்தைப் பார்த்தால், அதில், “This ticket will only be valid along with an ID Proof in original” என்றுதான் உள்ளது. அதாவது ஒரு  அடையாள அட்டை இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது. ஆனால், பயணம் செய்யும் அனைவரும் அடையாள அட்டை காட்ட வேண்டும் என்று ஒரு விதியும் இல்லை. ஆனால், குழுவாக பயணம் செய்வோரை குறி வைத்து இப்படி ஒரு வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது தென்னக இரயில்வே, அதுவும் தமிழ்நாட்டிற்குள் மட்டும்!

இங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றபோதும், கோவையிலிருந்து வந்தபோதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால், நாட்டின் பல இடங்களில் இருந்து (கோவாவில் இருந்து திரும்பி வரும்போது கூட) அப்படி ஒரு சோதனை ஒரு இடத்திலும் நடக்கவில்லை! கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு பல முறை பயணம் செய்துள்ளேன், ஒரு முறையும் இப்படிப்பட்ட சோதனை அங்கு ஒருபோதும் நடந்து பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் சோதனை? தெரியவில்லை. என்று குமுறுகிறார் அந்த தமிழர் .... 

4 ஜன., 2011

இலவசத்தை இலவசமாக முதல்வருக்கு கொடுத்த விவசாயி....


                    
                 என் நண்பனுக்கு  இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவசதொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி  கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது
பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கிக் கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி. வி. யை பெரியண்ண அரசுவிடமே கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.


ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அமைச்சரும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.அதில் ‘ மனிதனுக்கு டி . வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான்.


ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகுஅடைந்து விட்டனவா?


குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து
விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்தபின்


மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக
இருந்திருக்கும் . இதற்கு மட்டும்எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள்.
டி . வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான  மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம் . இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி. வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
           விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை,
லஞ்சம் ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒருநடமாடும் பிணமாக நான் எப்படி டி . வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி . வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்குமிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது .

எனவே,இந்த டி.வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச செய்தாலே போதும்.
இந்தியா வல்லரசாகி விடும் ’ என்று நீண்டது அந்த மனு.



இதைப் படித்த பெரியண்ண  முகத்தில் ஈயாடவில்லை. அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி. வி. யையும்வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அமைச்சர்.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
             “நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு
நகரத்துலபோய் கூலி வேலைக்கும், ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்
கிட்டிருக்கான் . இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும்
வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது.
 ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு .ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி. வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில்ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்பஅட்டைக்கும் டி. வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை
வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி. வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி . யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார் .
டி.வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு
கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி. க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒருடி.வி. யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’ என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!


செய்தி உண்மை.
செய்தி உண்மையென்று முத்துச்சரம் ராமலக்ஷ்மி உறுதி செய்திருக்கிறார்.

அவருக்கு ஒருவனின் குரல் சார்பாக தலைவணங்கி ,வாழ்த்துகள் ....நன்றி : மின்னஞல் நண்பர்

3 ஜன., 2011

மீனவனின் துயரம்

        
        இந்திய கடலோர காவற்படையின் (Indian Coast Guard - ICG) கிழக்குக் கரைத் தளபதியாக இருந்த தலைமை ஆய்வாளர் ஏ.இராஜசேகர், சென்ற வாரம் தனது பதவிப் பொறுப்பை புதிய தளபதியாக பொறுப்பேற்ற சத்யா பிரகாஷ் சர்மாவிடம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறிய சில
சிந்திக்க வைத்தவை .


“சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளிப்பதில் இந்திய கடலோர காவற்படை உறுதியாகவுள்ளது. இது குறித்து அரசிடம் பேசியுள்ளோம்” என்று ஏ.இராஜசேகர் கூறியுள்ளார். இது பல பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துள்ளது.


தமிழக கடலோரம் மட்டுமின்றி, மேற்கு வங்கம் வரை நீளும் இந்தியாவின் கிழக்குக் கரை முழுவதையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த கடலோர காவற்படையின் தலைமை ஆய்வாளராக இருந்தவர், தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து கவலைப்படுவது ஏன்? என்று புரியவில்லை. இந்தியாவின் கடலோர பாதுகாப்புடன் இணைந்ததல்லவா நமது நாட்டு மீனவர்களின் பாதுகாப்பும்? அவ்வாறு இருக்கையில் தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்?


சமீபத்தில் கூட, ஒரு மாதத்திற்கு முன்னர், செய்தியாளர்களிடம் பேசிய இராஜசேகர், அப்போதும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல் குறித்துப் பேசினார். அதுகுறித்து சிறிலங்க கடற்படையிடம் பேசப்போவதாகவும் கூட கூறினார். அதுவும் எல்லா பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளியானது. ஆயினும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை!


தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறுவாரே, அதேபோல், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி அரசிடம் பேசியுள்ளோம் என்று இராஜசேகர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது மத்திய அரசிடம்தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசிடம் பேசிய பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறதே எப்படி?


தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியை பாதுகாக்க மூன்று கடலோர காவற்படை கப்பல்களும் (இந்த கப்பல்களில் நீண்ட தூரம் தாக்கக் கூடிய பீரங்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் உள்ளன), இந்திய கப்பற்படையின் ஒரு கப்பலும், இரண்டு ஹெலிகாப்டர்களும், 4 டார்னியர் விமானங்களும் உள்ளன. ஆயினும் மிகச் சாதாரண கண்காணிப்புப் படகுகளில் வரும் சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கிவிட்டுத் திரும்புகின்றனர். இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்ற ஒரு முறை கூட, அங்கு இந்திய கடலோர காவற்படை வந்தததாக ஒரு மீனவர் கூட சொல்லவில்லையே!


அப்படியானால், தமிழக மீனவர்களை காக்கும் பணியில் இந்திய கடலோர காவற்படை ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு எந்த உத்தரவும் போடவில்லை என்றுதானே பொருள்?


அதுமட்டுமல்ல, இந்திய கடற்பகுதிக்கு மீன் பிடிக்க வந்த சிங்கள மீனவர்களின் 113 விசைப்படகுகளையும், மீனவர்கள் 589 பேரையும் கைது செய்துள்ளதாகவும் கூறுகிறார். இத்தனை பேர் இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்தும் அவர்களில் ஒருவரையும் இந்திய கடலோர காவற்படை சுடவில்லையே? எல்லோரையும் கைது செய்து பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து பிறகு படகுகளையும், மீனவர்களையும் மிக பத்திரமாக சிறிலங்க அரசிடம் ஒப்படைத்துள்ளீர்கள். ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்கு அருகே, நமது எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கூட, சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுகின்றனரே. அது எப்படி? இந்திய மீனவர்களைத் தாக்கினால் இந்தியாவின் கடலோர காவற்படை திருப்பித் தாக்கும் என்ற அச்சம் சிறிலங்க கடற்படையினருக்கு இல்லையே எதனால்?


அப்படியானால், இந்திய அரசின், அதன் கடலோர காவற்படையின் இரகசிய ஒப்புதலோடுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்டுகின்றனர் என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?


இந்தியாவின் பாதுகாப்புத் துறை செயலர் பிரதீப் குமார் நேற்று முன் தினம் கொழும்புவில், சிறிலங்க பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நாளில்தானே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்? இதன் பொருள் என்ன?


இந்தியாவிற்கும் (அதாவது தமிழ்நாட்டிற்கும்) இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பை இணைந்து கண்காணிப்பது தொடர்பாகவே அவர்கள் பேசினார்கள் என்று அதிகாரப்பூர்வமாக சிறிலங்க அரசு செய்தி தருகிறது. ஆனால், அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தாக்குதல் நடத்துகிறது! அப்படியானால் அவர்களின் அஜெண்டாவில் தமிழக மீனவனின் பாதுகாப்பு இல்லை என்பதுதானே பொருள்.


அதுதான் உண்மை. தமிழக மீனவன் மட்டுமல்ல, தமிழ் ஈழத்து மீனவனும் மீன் பிடிக்காமல் செய்ய வேண்டும். இதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம். அதனால்தான், எல்லை மீறி வந்து மீன் பிடிக்கும் சிங்கள மீனவன் பாதுகாப்பாக கைது செய்யப்பட்டு, பிறகு படகுடன் பத்திரமாக சிறிலங்க அரசிடம் ஒப்படைக்கப்படுகிறான். ஆனால், கச்சத் தீவிற்கு அருகே, இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள்ளேயே மீன் பிடிக்கும் தமிழக மீனவன் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுகிறான். அவன் பிடித்து வைத்த மீன்களும், இறாலும் பறிக்கப்படுகிறது அல்லது கடலில் கொட்டப்படுகிறது. படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன.


இந்த நிலைதான் 1983ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை மாற்றமின்றி நீடிக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,000 மேற்பட்ட மீனவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை.


அதனைப் பொறுத்தவரை தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையோ?

2 ஜன., 2011

அநீதிகளை வெளிப்படுத்தவதே -விக்கிலீக்ஸ்

        2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.


உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.


அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிடவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.


இப்போது கூட, உலகமே 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.


இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.


பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.
மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.


இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது?
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?


அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.


அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார். இதை நாமும் வரவேற்ப்போம்

1 ஜன., 2011

அனைவருக்கும் வணக்கம் ....

        தமிழில் பேச , எழுத வேண்டும் எனும் ஆர்வமும், எழும் சிந்தனைகளை எழுத வேண்டும் என எண்ணிய போது அடித்தளம் எனக்கு தந்தது வலைப்பூ .
                பல எண்ணங்களை கதைகளாக, கவிதையாக , கடந்த  ஆண்டு எனது 
covairamanathan.blogspot.com வலைப்பூவில்   எழுதி வருகிறேன். எனக்குத் தெரிந்த சமூக கொடூரங்கள் , எனது எண்ணத்தில் 
"தனிமனிதனின் குரலாக"  எழுத முயற்சி  செய்து வலைப்பூ ஒன்றை ஆரம்பிக்க பல மாதங்கள் முன்பு முடிவு பண்ண 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சமூக சிந்தனையும் இல்லை, பின்னர் எனது சமூக எண்ணங்களையும், எழுத்துக்களையெல்லாம் 
தெரியப்படுத்தும்  தனி ஒருவனின் குரலாக இதை  பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பிக்கிறேன் . 
      சென்ற வலைப்பூவில் எனது எழுத்தை  வெளியிட்டுவிட்டு அதற்குரிய விமர்சனங்களையெல்லாம் பார்த்துப் பழகிய பின்னர் இப்போதுதான் உண்மையான எழுத்துலகம் எப்படியிருக்கும் என்பது தெரிய முடிந்தது.
            எனது  எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும்.

சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

        என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.


தங்கள் ஆதரவுடன்

மிகவும் நன்றி.