2 ஜன., 2011

அநீதிகளை வெளிப்படுத்தவதே -விக்கிலீக்ஸ்

        2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.


உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.


அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிடவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.


இப்போது கூட, உலகமே 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.


இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.


பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.
மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.


இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது?
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?


அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.


அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார். இதை நாமும் வரவேற்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக